இந்த மாத உதிரிகள் இதழில் எனது 15 கவிதைகள் வெளியாகியுள்ளன..
வாசியுங்கள்...
சொற்கள்
1.
இந்த மாத உதிரிகள் இதழில் எனது 15 கவிதைகள் வெளியாகியுள்ளன..
வாசியுங்கள்...
சொற்கள்
1.
நின் நெஞ்சு நேர்பவள் - கவிதைகள் - இரா. பூபாலன்- 98422 75662
ஒரு பார்வை - பொன். குமார்
கவிஞர் இரா. பூபாலன் சமீபங்களில் கவிதை உலகின் கவனத்தை ஈர்த்து வருபவர். கவிதை எழுதுவதிலும் ஒரு நிதானமான போக்கைக் கடைப்பிடித்து நல்ல கவிதைகளை எழுதி வருபவர். பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, ஆதிமுகத்தின் காலப்பிரதி, அரூபத்தின் வாசனை, திரும்புதல் சாத்தியமற்ற பாதை, தீ நுண்மிகளின் காலம், ஹோ.. என்றொரு கவிதை என்னும் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரின் ஒரு புதிய கவிதைத் தொகுப்பு ' நின் நெஞ்சு நேர்பவள்'. முழுக்க பெண்களைப் பற்றியது. தாய் முதல் தோழி வரை அனைத்து உறவுகளையும் பாடியுள்ளார்.
" அம்மாவிலிருந்து தொடங்கிய இந்த உலகம் அவளையே சுற்றிச்
சுற்றி வந்தபடி அவள் தந்த, அவள் காட்டிய பெண்களின் கைகளைப்
பற்றியபடியே தான் சுழன்றுகொண்டிருக்கிறது. என் வாழ்வின் பெண்கள்
எல்லோரும் சேர்ந்து பிசைந்து உருவாக்கிய பிண்டம் தான் நான் என்பது எனக்குத் தெரியும். நாம் அனைவருமே அப்படித்தான். இல்லையென்றால் பெண்களற்ற நம் பூமி எப்போதோ கருகிப் போயிருக்கும் " என என்னுரையிலே தெளிவாக எழுதி தொகுப்பைத் தொடங்கியுள்ளார்.
அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே
என்னும் குறுந்தொகை பாடலிலின் இறுதிவரியிலிருந்து நின் நெஞ்சு நேர்பவள் என்னும் தலைப்பைத் தேர்ந்தெடுத்து பொருத்தமாக வைத்துள்ளார். குறுந்தொகையின் மீதான பற்றையும் காட்டியுள்ளார்.
அப்பாவின் பழைய லுங்கிகளை
சதுர சதுரமாக வெட்டி
குளியலறை எரவானத்தில்
பத்திரப்படுத்தியிருப்பாள் அம்மா
பால்யத்தில் நான் அவற்றைக்
கேள்விகளால் துளைத்துப்பார்த்துவிட்டேன்
உனக்கு அது தேவை இல்லாததென்ற
ஒரு பதிலில் கடந்துவிடும் அம்மாவுக்கு
ஐந்து நாட்கள் விடுமுறைக் கணக்கில்லை
சோர்ந்து படுத்து ஒரு நாளும் பார்த்ததில்லை
துணிகளில் படாமல் போன
செந்துளியின் சிறுதுளி தான்
நானெனப் பின்னாளில் அறிந்துகொண்ட போது
அம்மாவின் உடல்
வன தேவதையின் உடலெனப் பச்சையம் பூசியிருந்தது
என அம்மாவிலிருந்தே கவிதையைத் தொடங்கியுள்ளார். அம்மாதானே அனைவருக்கும் தொடக்கம். இக்கவிதையின் தலைப்பு செந்துளியின் சிறுதுளி. மாதவிடாய் காலத்தில் அம்மாவின் அவஸ்தையை உணரச்செய்துள்ளார். ஒரு மகனிடமிருந்து மறைப்பதற்கு அம்மா படும் இம்சையையும் கூறியுள்ளார். எனினும் இக்கவிதை
மனைவிக்கு
மகளுக்கு
தோழிகளுக்கு
அந்த நாட்களின் தேவைகளின் பொருட்டு
மருந்துக் கடைக்குப் போக
தேநீர் கலந்து கொடுக்க
சிறு சிறு உதவிகள் செய்ய
என்னைப் பணித்தவை
அந்த லுங்கிச் சதுரங்கள் தாம்
என தொடர்கிறது. அம்மா படும் அவஸ்தையே அம்மா பட்ட இம்சையே பின்னாளில் மனைவி, மகள், தோழிகளுக்கு உதவ காரணமாக இருந்தது என்கிறார். அம்மாவின் மூலம் பெண்களின் நிலையை உணரச்செய்துள்ளார். ஆண்களும் மாத விடாய்க் காலங்களில் உதவியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது கவிதை. மேலும் இக்கவிதையை
அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான்
அப்பாவுடைய
என்னுடைய
இன்ன பிற ஆண்களுடைய
கறைகளை
மனதின் எரவானத்தில்
யாரும் பாராமல்
ஒளித்துவைத்தே இருக்கிறாள்
என நிறைவுச் செய்து அம்மாவை உயர்த்திக் காட்டியுள்ளார். அம்மா என்பவள் ஆண்களின் கறையையும் மூடி மறைத்தே வாழ்பவர் என்கிறார்.
பிள்ளைகளுடன் விளையாடுவதில் அம்மாக்களுக்கு எப்போதுமே அலாதி பிரியம். பொதுவாக விளையாட்டு என்றால் வெற்றிப் பெறுவதாகவே இருக்கும். பிள்ளைகளுடனான அம்மாக்களின் விளையாட்டில் அம்மாக்கள் தோற்கவே விரும்புவார்கள். விளையாடுவார்கள். பிள்ளைகளை வெற்றிப்பெற வைப்பதிலேயே அம்மாக்களின் குறிக்கோள் இருக்கும். பிள்ளைகளின் மகிழ்ச்சியே பெற்றவளின் மகிழ்ச்சி. 'அம்மாவுடனான விளையாட்டு ' அருமை.
அவள் தோற்றுத் தோற்றுத்தான்
ஆணாக்கியிருக்கிறாள்
என்னை
அப்பாவை
என கவிஞர் விளையாடி இருக்கிறார். கவிஞரின் விளையாட்டும் அருமை. ஒரு மகனை ஆணாக்கியிருப்பது அம்மாவின் தோல்வியல்ல. அதுவே அவளின் வெற்றி. இதுவே கவிஞரின் வெற்றி. ' பொய்ச் சிலை ' யும் அம்மாவின் வின் விளையாட்டையே காட்டுகிறது. அம்மா பொய்ச் சிலை அல்ல. மெய்ச் சிலை.
ஒரு பூக்காரியின் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது ' இன்மையின் சன்னதம்'. தினமும் சாலையில் பார்க்கும் பூக்காரி பூ வாங்கக் கோரும் போதெல்லாம் வாங்காமல் செல்கிறார். ஒரு நாள் பூக்காரியைக் காணாமல் மனம் வாடுகிறார்.
நாளை அவள் வந்துவிடவேண்டும்.
யாருக்காகவாவது
ஒரு முழம் பூவை வாங்கிவிட்டால் போதும்
என்றிருக்கிறது
என எண்ணுகிறார். தினசரி காணும் பூக்காரியை ஒரு நாள் காணாத போதே அவளிடம் பூ வாங்க முடிவெடுக்கிறார். பூ விற்றால்தானே பிழைப்பு நடத்த முடியும்? பூக்காரி பெண்ணுக்கான கவிதை இது.
'யாசகம்' ஒரு நல்ல கவிதை. பேருந்தில் யாசகம் கேட்கும் சிறுமிக்கு ஒருவன் பொம்மையை யாசகம் அளிக்கிறான். பொம்மையைப் யாசகம் பெற்ற சிறுமி தனக்குக் கிடைத்த சில்லறைகளை யாரோ ஒருத்திக்கு தந்து விட்டு பொம்மையுடன் செல்கிறாள். காட்சியாக விரிகிறது கவிதை. பொம்மையும் சிறுமியும் கண்முன் காட்சியளித்துக் கொண்டே இருக்கிறார்கள். பணத்தை விட பொம்மையே சிறுமிக்கு பிடித்தமானதாக உள்ளது.
' பழைய நகைச்சுவைக் காட்சி' அம்மாவின் நினைவுக்கூர்தலான அப்பாவைப் பற்றிய கவிதை. புகைப்படம் எடுக்கும் போது புகைப்படக்காரர் சிரிக்கச் சொல்வது வழக்கம். ஆனால் அப்போதுதான் சிரிப்பே வராது. அப்புகைப்படத்தைக் காணும் போதே சிரமப்பட்டு சிரித்ததே நினைவு வரும்.
பொண்டாட்டி தான் தள்ளி நிக்கறாங்களே
என்று புகைப்படக்காரனின் நகைச்சுவைக்கு
இப்போது மீண்டும் புன்னகை சிந்தினாள்
அப்பாவோ
அந்த நகைச்சுவைக்கு
இப்போது தான்
முதன் முதலாகப் புன்னகைக்கிறார்
என்பது கவிஞரின் கவிபுனைவைக் காட்டுகிறது.
எந்த ஒன்றிலும்
மிச்சமாவதை
விரும்பத் துவங்குவாள்
தனக்கென எதுவும்
தயாரிக்காதவள்
என்னும் 'மிச்சத்தை விரும்பாதவள்' தாய்க்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் பொருந்தும். பெண்களின் பொதுவான குணமாகும். ஆயினும்
இரவும் பணி தொடர்வதால்
வீட்டுக்கு வர முடியாது
என்று அவர் சொன்னபின்
மிச்சமான சாப்பாட்டை
புளியூற்றி வைத்துவிடுகிறாள்
பாலை உறையூற்றி வைத்துவிடுகிறாள்
எல்லா மிச்சங்களையும்
சரிக்கட்டிவிடும் அவள்
மிச்சமிருக்கும்
இந்த இரவை எதுவும்
செய்ய முடியாமல்
பார்த்துக்கொண்டிருக்கிறாள்
என்னும் 'கையறு நிலை' யில் மிச்சமிருக்கும் இரவில் பெண்கள் படும் நிலையைக் காட்டியுள்ளார்.
மருந்தகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணின் மனிதநேயத்தையும் இரக்கக்குணத்தையும் வெளிப்படுத்தியது 'வலி நிவாரணி'. மருத்துவர் எழுதி தந்த மொத்த மருந்துகளையும் வாங்க காசில்லா ஏழை முதியோர்க்கு பாதி தொகையில் முழு மருந்தையும் தந்து உதவுகிறாள்.
இன்று மாலை
இடிக்கும் கணக்கையும்
பிடிக்கும் சம்பளத்தொகையையும் பற்றிய
கவலைகளின்றி
வலிநிவாரணிகளை அடுக்கியபடியிருக்கிறாள்
என அப்பெண்ணை போற்றச்செய்கிறார்.
அன்றாட இல்லப்பணிகளில் வலிகள் இருந்தாலும் வேதனைகள் தொடர்ந்தாலும் பெண்கள் வெளியில் காட்டிக்கொள்ளாதவர்கள் என்று கூறும் கவிதை ' வலிகளின் நழுவல்'.
மலைக்காட்டின் வாசம், யாரும் பார்த்திராதது, கடவுளுக்கு முந்தைய, நேர்த்திக் கடன், ஒரு தரம்.. இரண்டு தரம்.. மூன்று தரம்.. ஆகியவை மலை குறித்தானவை. அப்பா மகள் உரையாடல்கள் மூலம் மலையை வியக்கச் செய்கிறார்.
மலைக் கோவில்
எப்போதிருந்து இருக்கிறது அப்பா?
நாம் பிறப்பதற்கு முன்பிருந்து
மலை எப்போதிருந்து
இருக்கிறது அப்பா?
கடவுள் பிறப்பதற்கு
முன்பிருந்து
என்னும் 'கடவுளுக்கு முந்தைய' கவிதையே கவனத்தை ஈர்க்கிறது.
மகள்கள் வெகு வேகமாக
வளர்ந்து விடுகிறார்கள்
அம்மாக்களின் செருப்பை
அணிந்துகொள்ளும் அளவுக்கு.
அவர்களின் உடையையும்
அணிந்துகொள்கிறார்கள்
அம்மாக்கள் தங்கள்
அணிகலன்களை
கைப் பைகளை
பங்கிக்கொள்கிறார்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
அப்பாவின் மடியிலிருந்து
தூரமாகி
அம்மாவின் தோழியாகிவிட்ட
ஒரு சிறுமியை
அப்பாக்கள் கனவுகளில்
துரத்தித் திரிகிறார்கள்
என்னும் ' ஊசல் ' நெகிழ்ச்சியானது. மகளின் அபரித வளர்ச்சியைக் காட்டுகிறது. மகள்கள் வளர வளர அப்பாக்களிடமிருந்து விலகிச் செல்வதைச் சொல்கிறது. ஆனால் அப்பாக்கள் மகளை நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்கிறார்.
கோபமென்றால்
எதையாவது உருட்டுவாள்
நிலம் அதிர நடப்பாள்
முந்தைய நாள்
விருப்பப்பட்டுக் கேட்ட உணவை
சமைத்து வைத்துவிட்டு
என்னும் 'அவள் அப்படித்தான்' பெண்களின் பேரன்பைக் காட்டுகிறது. இங்கு அவள் அம்மா, மனைவி, மகள், தோழி என எவளாகவும் இருக்கலாம்.
பெண்கள் இட ஒதுக்கீடுக்காக போராடியும் சமூகத்தில், நாட்டில் இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால் வீட்டில் சமையலறை பெண்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மீறினால் பக்தி அறை. ஆண்கள் சமையலறை பக்கம் எட்டியே பார்க்க மாட்டார்கள். சமையலறையே அம்மாக்களின் உலகம். பணத்தைக் கூட பாதுகாப்பாக வைக்க சமையலறை பயன்படும். அம்மாவிற்கு ஏற்படும் சகலவலிகளுக்கும் சமையலறையிலேயே மருந்தும் இருக்கிறது என்கிறது 'அம்மாவை ஊறவைத்து விழுங்குபவள் ' கவிதை. சளிக்கு மிளகு, காயத்திற்கு மஞ்சள், தலை வலிக்கு சுக்கு, மாதாந்திர வலிக்கு அவள் என சமையறையிலையே சகல நிவாரணிகளும் பெண்களின் கைவசம் உள்ளன என சமையலறை உலகம் காட்டுகிறது.
புகைப்படத்தை வைத்துக்கொண்டு அம்மாவிடம் மகளும் மகளிடம் அம்மாவும் பேசி பேசி அன்புக் காட்டிக்கொள்வதை கவிஞர் ' பழைய பைத்தியங்கள்' என்கிறார். இன்னும் அலைபேசி அறியாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பு என்பதே ஒருவித பைத்தியக்காரத் தனம்தானே..?
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை
என கவிஞர் கந்தர்வன் எழுதி எல்லோருக்கும் விடுமுறை நாளானாலும் பெண்களுக்கு மட்டும்
இல்லை விடுதலை என்கிறார். 'எனக்கான காற்று' தொகுதியில் கவிஞர் எ. ராஜலட்சுமியும்
'எனக்கு' கவிதையில்
உனக்கு ஞாயிறு விடுமுறை
எனக்கு?
என வினா எழுப்பியுள்ளார். இதே தொனியில் இதே பாணியில் கவிஞர் கிருஸ்ணப்ரியாவும் ' அரூபப் புலம்பல்கள்' கவிதையில் ஞாயிறு அன்றும் பெண்களுக்கு ஓய்வில்லை என்கிறார்.
வீடு மொத்தமும்
தொலைக்காட்சி, அலை பேசி என்று
தன்னைப் புறக்கணிப்பதை
பொறுத்தக் கொள்ளவியலாமல்
தேம்பும் ஞாயிறு
பார்க்கத் தவறுகிறது
விடுமுறை நாளின் விசேஷ சமையலுக்காக
சமையலறையில் கட்டப் பட்டிருக்கும்
அவளை..
ஞாயிற்றுக் கிழமை என்பது அனைவருக்குமான விடுமுறை நாள். ஆனால் வீட்டுப்
பெண்மணிகளுக்கு மட்டும் விடுமுறை இல்லை. மற்ற நாளகளை விட கூடுதலாகவே
பணியாற்ற வேண்டி உள்ளது. கவிஞரும் பெண்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். பெண்களுக்கு
விடுதலைக் கிடைக்கும் வரை இது போன்ற குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்
பெண் விரும்பும் 'ஆசையாய் ஒரு நாள் ' என்று வரும் என்று வேண்டியுள்ளார் வெட்கத்தில் நனைகின்ற தொகுப்பில் கவிஞர் கிருஸ்ணப்ரியா. கவிஞர் இரா. பூபாலன் ' நகலத்து நங்கை'க்கு ஞாயிற்றுக்கிழமையும் பணி என்கிறார். இது ஒரு நகல்தான். இன்னும் அசல்கள் இருக்கின்றன.
விடுமுறை நாளொன்றின்
அதிகாலையில்
உறங்கிக் கொண்டிருந்தவனை
உலுக்கி எழுப்பினாள்
"அப்பா ரோஜா செடி எவ்ளோ அழகா
பூத்திருக்கு வாங்க பாருங்க" என்றபடி
இதழ் இதழாய் விரிந்து பூத்திருந்த
முகத்தைப் பார்த்துச் சொன்னேன்
“ரோஜா எவ்ளோ அழகு"
என்னும் கவிதையின் தலைப்பு ' ரோஜாக்களின் அழகு '. மகளுக்கு ரோஜா அழகு. அப்பாவிற்கு மகளே ரோஜா போன்ற அழகு. ஆகக் கூடி கவிதையும் அழகு.
எப்போது எதற்கு அழுதாலும்
உன்னால தான் என்பாள்
எதற்கு எப்போது
சிரித்துக் கொண்டாலும்
உன்னை நினைத்துத்தான் என்பாள்
அவள் தான்
கடைசிக் கடிதத்தின்
முதல் வரியிலேயே எழுதித் தொலைத்திருந்தாள்
என் சாவுக்கும்
அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென
இக்கவிதையின் தலைப்பு ' உன்னால் தான்'. தொகுப்பின் நிறைவுக்கவிதையான இது நெஞ்சில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்கள் ஆண்களைக் காட்டித்தருவதில்லை என்கிறார்.
கவிஞர் இரா. பூபாலனின் 'நின் நெஞ்சு நேர்பவள்' என்னும் தொகுப்பு முழுவதும் பெண்களைப் பற்றிய கவிதைகள். ஓர் ஆணின் பார்வையில் பெண்கள் குறித்து எழுதியுள்ளார். பொதுவாக பெண்கள் என்று சொல்லாமல் அம்மா, மனைவி, மகள், தோழி என வகைப்படுத்தி அவர்கள் குறித்து கவிதை இயற்றியுள்ளார். எனினும் பொதுவாக பெண்களைப் பற்றியே பேசியுள்ளது. பெண்களின் வலிகளும் உண்டு. வேதனைகளும் உண்டு. அன்பும் உண்டு. ஆதரவும் உண்டு. பண்பும் உண்டு. பாசமும் உண்டு. பெண்களின் பலபடிநிலைகளைக் கவிதையில் காட்டியுள்ளார். கவிதைகள் உரத்து பேசவில்லை என்றாலும் உண்மைகளை பேசியுள்ளன. உரத்து பேசியுள்ளன. அம்மாவிற்கு மகனாக, மனைவிக்குக் கணவனாக, மகளுக்கு அப்பாவாக, தோழிக்கு தோழனாக தன்னை முன்னிறுத்தி ஒரு கவிஞனாக வெற்றிப்பெற்றுள்ளார். கவிதையின் செய்நேர்த்தி சிறப்பு. கவிதையை வாசிக்கத் தொடங்கும் போது தெரிகிறது. தானாகவே வாசிப்பு முடிவடைகிறது. கவிதை சொல்ல வேண்டியதை மையப்புள்ளியில் இருந்து விலகாமல் சொல்லியுள்ளார். சொற்கள் சொக்கச் செய்கின்றன. வரிகள் வசீகரிக்கின்றன. பாடுபொருள் பாராட்டச் செய்கின்றன. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கவிஞர் இரா. பூபாலன் பெண் சமூகத்தின் பெரும் அக்கறைக் கொண்டவரென உறுதிச் செய்கிறது நின் நெஞ்சு நேர்பவள் என்னும் தொகுப்பு. ஒரு கவிஞராக பெண்கள் மனத்திலும் இடம் பிடிப்பார். கவிதை உலகிலும் வலம் வருவார். அம்மாவை அவள் என்பது அன்பின் வெளிப்பாடு. " அம்மாவாக, மனைவியாக, மகளாக, தோழிகளாக, அக்காக்களாக,
தங்கைகளாக என்னை நானாக்கிய பெண்கள் தாம் இந்தக் கவிதைகள்
அவர்களை ஒன்று திரட்டி ஒரு தொகுப்புக்குள் கொண்டு வந்திருக்கிறேன். அது உங்கள் கைகளில் தவழ்கிறது. உங்கள் வாசிப்பில் அவர்கள் இன்னும் கொஞ்சம் அழகாகக் கூடும் " என அழைப்பு விடுத்துள்ளார். அழகாக்குவது வாசகர் பொறுப்பு. கடமை.
வெளியீடு
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
9842275622
- ஆன்மன்
ஹோ … என்றொரு கவிதை
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலாளரும் எங்களின் இனிய தோழருமான கவிஞர் இரா.பூபாலன் அவர்கள் எழுதிய “ஹோ… என்றொரு கவிதை” நூல் குறித்து எனது வாசிப்பனுபவம்…
இத்தொகுப்பானது கவிஞர் இரா.பூபாலன் அவர்களுக்கு ஏழாவது தொகுப்பாகும்,பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான இவர்,
பத்மஸ்ரீ சிற்பி ஐயா அவர்களிடம் ஒரு மாலைப்பொழுதில் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் சிற்பி ஐயா அவர்களின் கொள்ளுப்பேத்தி உரையாடல்களின் குறுக்கே ஹோ என உச்சரித்த ஒலியினைக் கொண்டு இந்நூலுக்கு “ஹோ…என்றொரு கவிதை” யென தலைப்பாக வைத்துள்ளார். இந்நூலின் அட்டைப்படமே ஒரு சிறுமியின் புகைப்படத்தோடு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது, குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொருவரையும் இந்நூலும் நேசிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லையென நம்புகிறேன்.
எப்போதும் நண்பர்களை வாசிக்குமாறும் எழுதுமாறும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞர், பல்வேறு இளம் படைப்பாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.
தனது அறை அலமாரிகளை நூல்களால் நிறைத்த அன்பு மிகுந்த நல்ல மனிதர்,
இவர் கவிதைகளைத்தான் காதலித்தும்,காதலித்துக்கொண்டும் கவிதையாகவே வாழ்ந்து வருபவர். தனது வாழ்க்கையின் அழகிய தருணங்களாக கவிதை வாசிப்பதையும், கவிதை எழுதுவதையும் குறிப்பிட்டுள்ள கவிஞர்,
தனது கல்லூரி பருவத்தின் போதும், பணி நிமித்தமாகவும் தினமும் பேருந்தில் பயணித்த நாட்களில் சாலையிலும், சாலை ஓரங்களிலும் தான் கண்ட அழகிய நிகழ்வுகளை காட்சிபடுத்தியுள்ளார். எல்லாக் கவிதையிலும் அன்பையும் கருணையையும் நீரூற்றாய் ஓட விட்டிருக்கும் கவிஞர், இந்நூலையே கவிதைகளுக்காக சமர்ப்பணம் செய்திருப்பது கவிதைகளின் மீது அவருக்கு இருக்கும் தீரா பற்றை வெளிப்படுத்தியிருக்கிறது.
பொதுவாகவே அப்பா மீது அதிக பாசம் கொண்ட இவர், முதல் கவிதையிலேயே அப்பாவைப்பற்றி எழுதியிருக்கும் வரிகள் வாசிக்கும் போதே
பள்ளிப் பருவத்தில் அப்பாவுடன் நிகழ்ந்திருந்த நினைவுகள் அத்தனையையும்
கொண்டாடி மகிழும் அழகிய வரிகளாகும்.
அப்பாவின் கையெழுத்து என்ற தலைப்பில் தொடங்கும் இக்கவிதையில்
தான் படிக்கவில்லையென்றாலும் தனது பிள்ளை உயர்படிப்புகள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டுமென விரும்பும் அப்பா, கம்பீரமாய் மீசையை தடவிய நாட்களை நினைவுபடுத்துவதோடு பிள்ளைகள் மீது அப்பாக்களுக்கு இருக்கும் பாசத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவதாகவே உணர்கிறேன்.
“எழுதப்படிக்கத் தெரியாத
அப்பா
கைகள் நடுநடுங்க
ரா…ம…சா…மி என வங்கியிலோ
நான் நீட்டும் மதிப்பெண் அட்டையிலோ எப்போதாவது கையெழுத்துப் போட்டுப் பார்ப்பார்.
சமயங்களில் ராமாமி ஆகிவிடும் அது
எழுதி முடித்தவுடன் மீசையைத் தடவி விட்டபடி
பெருமிதமாகச் சிரிப்பார்
காடு மேடெல்லாம்
அலைந்து திரிந்தும்
தன் முதுகுத்தண்டை
அடமானத்துக்கு வைத்தும்
பிள்ளையின் பெயரின் பின்
வாங்கித் தந்த பட்டத்தால் என்ன சாதித்தாய் என்கிற
கேள்விக்கு அந்தச் சிரிப்பைத் தான் பதிலாக சொல்வேன்.”
என முடியும் முதல் கவிதை அப்பா மகனுக்கு இடையிலுள்ள உறவை உயிரோட்டத்துடன் உணர்வுப்பூர்வமாக காட்டுகிறது, என்ன சாதித்தாய் என கேட்கும் கேள்விக்கு தன்னை ஆளக்கியவர் முன் சிரிப்பைத்தான் பதிலாக சொன்னேன் எனக்கூறுவது மனத் தெளிவையும், முதிர்ந்த அறிவையும் வெளிப்படுத்துகிறது.
கூடுதலாக ஒளிரும் சிவப்பு கவிதையில் சக்கரப் பலகையோடு நடமாடும் மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை பேசுகிறது,இனாமாய் எதையும் வாங்க விருப்பமில்லாதவன் புத்தகங்களை கூவி விற்று பிழைப்பு நடத்துகிறான்,இந்நிலையில் தனது கொள்கைகளை தளர்த்திக்கொள்கிறான் பிஞ்சுக் குழந்தைக்காக…
இவ்வரிகளை வாசிக்கும்போது இவரைப் போன்றவர்களிடம்தான் இன்னும் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமெனத் தோன்றுகிறது.
மழை ஒதுக்கியவன் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் கவிதை அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குள் வாழ்பவர்களுக்கு துளிகள் ஒவ்வொன்றும் அந்நியப்பட்டதாகவும்,இவர்கள் தீண்டத்தகாதவனென மழைத்துளிகள் வாசலோடு திரும்பிப் போவதாகவும் உண்மை நிலையைத்தான் பேசுகிறது.
நான்முனைச் சித்திரம்
எனும் கவிதையில்
நான்கு முனைச் சந்திப்பொன்றில் வாகன ஓட்டிகளின் அன்றாட பிரச்சினைகள் சிலருக்கு துன்பமாக அமைந்தாலும்,அதே நேரத்தில் சிலருக்கு இன்பத்தையும் தருகின்றன என்பதை இவ்வரிகளால் அறிய முடிகிறது
“யுத்தக்களத்தின் நடுவே ஒருத்திக்கு
நான்கு முழம் பூ போணியானது
ஒரு பரட்டைக் கிழவனின்
தட்டில் சில சில்லறைகள் கூடுதலாகின்றன”
பதற்றம் எனும் கவிதை
எல்லோருக்குமே ஒருநாள் பதற்றமாகி விடுகிறதென்றால் அது வங்கியிலிருந்து பணப்பையோடு திரும்பும் நாட்களாகத்தானே இருக்கும்,
ஏனென்றால் எதிரில் வருபவர்களிலிருந்து நம்மைக் கடந்து செல்பவர் வரை ஒவ்வொருவரும் நம்மைத்தான் பின்தொடர்கின்றனர் என்ற பெரும் அச்சத்தை ஏற்படுத்திவிடுகிறது, இதற்கு இன்னொரு காரணமும் உண்டு, வழி கேட்பது போலவும் உதவிசெய்வது போலவும் தானாக வந்து ஏமாற்றி பணத்தை பறித்துச்செல்லும் காட்சிகள்தானே திரும்பிய பக்கமெல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது, இதோ அந்த பதற்றமான வரிகள்….
“வங்கியில்
பணம் எடுத்துவிட்டுத்
திரும்புகையில்
யாரோ ஒருவர்
புன்னகைத்துச் செல்கிறார்
பையைத் தொட்டுத் தொட்டுப்
பார்த்துக்கொண்டே
வீடு திரும்புகிறது மனது.”
ஹோ… என்றொரு கவிதையில் குழந்தையின் குறும்புத் தனத்தையும் அழகிய சொற்களையும் உன்னிப்பாக கவனித்ததன் வரிகள்தான் இதோ
“ஒரு மணி நேர உரையில்
உலகையே சுற்றி வருகின்றன மகாகவியின் சொற்கள்
ஆயினும்
மூன்று ஹோக்கள் மட்டும்
கவிதையாகி விடுகின்றன
அம்மையப்பனைச் சுற்றிவந்து
அபகரித்துக்கொண்ட ஞானப்பழமென”
அதே சமயம் இன்றைய சமூக வலைதளங்களில் எதைத் தொடுகிறோமோ அவை பெரும் தரவாக வந்து தொல்லை தந்து கொண்டிருப்பதையும் அதை மறுப்பதற்கு வேறொன்றைத் தொட்டு அது தொடர்கதையாகி விடும் அவலங்களையும், இக்காலத்தில் தொடுதிரை அலைபேசி பயன்பாட்டாளர்களின் இன்னல்களை புத்த விளம்பரம் எனும் கவிதை தெளிவாக காட்டுகிறது.
ஒவ்வொரு கவிதையை வாசிக்கும் போதும் நான்முனைச் சந்திப்பு சாலைகளில் போக்குவரத்தை சரிசெய்யும் காவலரிலிருந்து அங்கு புத்தகம் விற்பனை செய்பவர் வரை ஒவ்வொருவரையும் நம் கண்முன் நிறுத்தி மகிழும் கவிஞர் அலைபேசிகளின் வழியே நமது கேளிக்கைகள் நாள்முழுவதும் எவ்வாறெல்லாம் செலவிடப் படுகிறதென்பதை வித விதமாய் வரைந்திருக்கிறார்.
அதிசய மழை எனும் கவிதையில்
அலைபேசி வாயிலாக பேசும் ஒருவர், பெய்யாத மழையை பெய்வதாய் கூறி அருகிலிருப்பவரை வியப்பில் ஆழ்த்துவது எல்லா ஊர்களிலும் நடந்துகொண்டுதானே இருக்கிறது.
வழியிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பைத்தியகாரர்களை கண்டிருப்போம், அவர்கள் எப்போதும் எதையாவது உளறிக்கொண்டேயிருப்பார்கள், அப்படிப்பட்ட ஒரு பைத்தியகாரியைப் பற்றி இவரது பார்வை….
“ஒரு பைத்தியக்காரியின் சொற்களென
சதா பெய்கிறது மழை
நகர வழியற்று
அருகமர்ந்து
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
சக
பைத்தியகாரனாக”
பல்வேறு விதமான மனிதர்களையும் நிகழ்வுகளையும் கருணை மனதோடும் இரக்க குணத்தோடும் வெளிப்படுத்தியிருக்கும் கவிஞர், மீண்டுமொரு முறை தந்தையைப்பற்றியும் அவரது இழப்பினைப்பற்றியும் எழுதி வாசிப்பவர்களின் விழிகளையும் மனதையும் நனைய வைத்துவிடுகிறார், ஆம் தந்தையின் அஸ்தியோடு அவர் ஆறுவரை நடந்து செல்லும்போது மனதில் ஏற்படும் வலிகள் எவ்வளவு கொடுமையானது என்பதையும், அத்துயர நேரத்தில் கண்ணில் தென்படும் ஒவ்வொன்றும் அப்பாவுடனான பழைய நினைவுகளை பேசுவதை நினைத்து நினைத்து நகரும் தூரம் எவ்வளவு துயரமானதென்பதையும் கண்ணீரோடு பதிவு செய்திருக்கிறார்.
இறுதியாக நான்கு தேநீர் கோப்பைகளோடு வழியனுப்பும் கவிஞரின் இத்தொகுப்பு, உளவியலோடு உணர்வுகளும் கலந்த உன்னத தொகுப்பாகும்.
நூலின் தகவல்கள்
நூல் : “ஹோ… என்றொரு கவிதை”
நூலாசிரியர் : இரா.பூபாலன்
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடு
பக்கங்கள் : 96
விலை : ₹130
நூலைப் பெற : 98422-75662
நூல் அறிமுகம் : கவிஞர் கோவை ஆனந்தன்
இந்த நூல் அறிமுகம் புக் டே இணைய இதழில் வெளியாகியுள்ளது..
வாசிக்க :
நின்நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு