திங்கள், 17 நவம்பர், 2014

கோடிக் கணக்கில் கொன்று குவிக்கப்படுகிறார்கள் குழந்தைகள்...

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடி முடித்த கையோடு இந்த அதிர்ச்சியான தகவல்கள் நம் அடிவயிற்றில் நெருப்பள்ளிப் போடும்...

தர்மபுரி அரசு மருத்துவமனையில் இது வரை ஒன்பது பச்சிளம் குழந்தைகள் காரணம் தெரியாமல் இறந்திருக்கின்றனர்.. இந்த நிமிடம் வரை அரசு தரப்பிலிருந்து பெரிதாக யாரும் இதைப் பற்றிப் பேசவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை என்பது மழலைகளின் மரணத்தை விடவும் வேதனையானதல்லவா. இந்நேரம் , தமிழ் நாட்டின் முக்கிய குழந்தைகள் மருத்துவர்களின், ஆய்வர்களின் குழு அங்கு குவிந்திருக்க வேண்டாமா. Root cause எனப்படும் அடிப்படைக் காரணத்தைச் சரியாக உடனடியாகக் கண்டுபிடித்து அதைச் சரி செய்வதின் மூலம் மேலும் பல மரணங்களை உடனடியாகத் தடுத்துவிட வேண்டும் அல்லவா. அதை விடுத்து, அறிக்கை விடுவதும், கடிதம் அனுப்புவதும், ஜால்ரா தட்டிக் கொண்டும் என அரசு படு மோசமான மெத்தனத்துடன் இருப்பது ஒரு வித அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. பெரிய தனியார் மருத்துவமனைகளில் பார்க்க வசதியில்லாதவர்கள் ( சிறிய மருத்துவமனைகளில் கூட பிரசவம் பார்க்க சொத்தில் பாதியை விற்க வேண்டும் என்பது தனிக் கதை ) அரசு மருத்துவமனைகளை நம்பி வருகிறார்கள். குழந்தைகளை இழந்துவிட்டு, அதற்கான காரணமும் தெரியாமல் பரிதவித்து நிற்கும் ஏழைப் பெற்றோர்களுக்கு என்ன பதில் இருக்கிறது அலட்சியமான அரசு மருத்துவர்களிடமும் அரசிடமும்..?

குழந்தைகள் பிறந்து இறந்தது பெரிய சோகம் எனில், பிறப்பதற்கும் முன்பே குழந்தைகளை நாம் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர கீழ்க்கண்ட செய்தியை வாசித்துவிட்டு வாருங்கள்...



ஒரு ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ஒண்ணே கால் கோடி சிசுக்களை நசுக்கி அழிக்கிறோம் என்பதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

எனக்கு நிறையத் தம்பதிகளைத் தெரியும், ஒரே ஒரு குழந்தையின்றி திருமணமாகி பல ஆண்டுகளாகியும் அழுது, தொழுது ஆற்றிக் கொண்டிருப்பவர்களை.

ஒவ்வொரு மாதமும் மாத விலக்கு ஆன நாளின் இரவில் தனியறையில் கதறி அழும் மனைவியையும் அவளைத் தேற்ற முடியாமல் சமயங்களில் கூட அழுதும், விரக்தியாகிக் கத்தியும் ஆற்றாமல் இருக்கும் கணவர்களையும் தெரியும்.


இவர்கள் குழந்தை வரம் வேண்டிப் போகும் மருத்துவமனைகளில் தான் இவர்களை விடவும் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் கருவிலேயே குழந்தைகளைக் கொலை செய்யச் சொல்லி மனுப்போட்டுக் காத்திருக்கின்றனர்.

மருத்துவர்களும் சும்மா போனவுடன் வாங்க என்று கலைத்துவிடுவதில்லை, நிறையக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், நடைமுறைகள் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், இவற்றுக்குப் பயந்து மருத்துவமனைக்குப் போகாமல் வெவ்வேறு வழிகளில் தங்கள் கருக்களை அழித்துவிடுபவர்கள் இந்தக் கணக்கில் சேரமாட்டார்கள்.

இத்தனை கோடிக் குழந்தைகளைக் கொல்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும், இருப்பினும் வரும்முன்னர்க் காக்க நிறைய வழிகளிருந்தும், வந்த பின்னர் , அதுவும் வளர்ந்த பின்னர் அழிப்பது எத்தனை வேதனையானது. செயற்கையான முறையில் கருவைக் கலைப்பதனால், பெண்ணுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆண்டாண்டு காலங்களுக்கு ஆபத்து உண்டு என்று மருத்துவ உலகம் சொல்லிக் கொண்டிருந்தாலும் இந்த எண்ணிக்கை குறைந்தபாடில்லை..

எனக்கு ஒரு அக்கா அறிமுகம் ஆனார்கள், அவர்களது கதை பெரும் சோகக் கதை, திருமணமாகி ஐந்தே மாதங்களில் கர்ப்பம். ஆனால் கணவனை விட்டு மனைவி மட்டும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும்படி சூழல், கருக்கலைத்துவிட்டார்கள். ஒரு வருடத்தில் திரும்ப வந்துவிட்டார்கள், பின்னர் சரியாக ஒன்பது வருடங்களாகக் குழந்தை இல்லை. எப்படித் துடித்திருப்பார்கள்..? பிறகு நிறைய வைத்தியத்தின் உதவியால் ஒரு குழந்தை கிடைத்ததால் அவர்கள் காப்பாற்றப்பட்டுவிட்டார்கள்.

மிகச் சமீபத்தில் இரண்டு வாரம் முன்பு, பக்கத்து கிராமத்தில் நடந்த சம்பவம், 19 வயதுப் பெண் அவள். அருகிலிருக்கும் மில்லுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தவள். திடீரென ஒரு நாள் விஷமருந்தி இறந்து விட்டாள். வீட்டிலேயே இறந்திருந்தால் என்ன ஏது என்று கூடத் தெரிந்திருக்காது, அவளது நேரம் இழுத்துக் கொண்டிருக்கிறாள் என்று மருத்துவமனைக்குக் கூட்டிப் போயிருக்கிறார்கள் பிரயோஜனமில்லை. அங்கு தான் மிகப்பெரிய அதிர்ச்சியை அவர்கள் உடைத்திருக்கிறார்கள். இறந்த பெண் ஆறு மாதக் கர்ப்பமாம். வீட்டுக்குத் தெரியவேயில்லை. ஒல்லியான உடல்வாகுள்ள பெண் என்பதால் தெரியாமல் இருந்திருக்கலாம். பிறகு காவல்துறையிடம் செல்ல, அவளது செல்பேசியை ஆராய்ந்ததில் அவள் இறப்பதற்கு முன்னர் பல முறை ஒரே எண்ணில் பேசியிருக்கிறாள். அது திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் ஒரு ஆணின் எண். இப்போது அவனைக் கைது செய்திருக்கிறார்கள்.

கருக்கலைப்பு என்பதும் ஒருவகைக் கொலைதான் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதன் பின் விளைவுகளை நாம் பூதக்கண்ணாடியின் மூலம் பெரிதாக்கி விளக்கியே ஆகவேண்டும். கொத்துக் கொத்தாக இத்தனை உயிர்களை ஆண்டுதோறும் கொல்வதைக் குறைத்து விட வேண்டும்.

பாலியல் கல்வியின் ஒரு பகுதியாகவே இதைக் கருதலாம். பாலியல் கல்வியை நமது சூழலில் கொண்டுவர இயலாத அல்லது இன்னும் நாட்கள் பிடிக்கும் நிலையில் கருக்கலைப்பு, பாலியல் நோய்கள் போன்ற முக்கியமான விஷயங்களையாவது சிறப்பு வகுப்புகளின் மூலம், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிலிருந்தே சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாம். அது ஒரு விழிப்புணர்வைத் தரும்.



வேறென்ன சொல்ல , வெறுப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக